சென்னை: அறுபடை முருகனுக்கு உகந்த கந்தசஸ்டி விழா அக்டோபர் 22ந்தேதி தொடங்கி 28ந்தேதி முடிவடைகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முருக பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 2025 ஆம் ஆண்டின் கந்த சஷ்டி விழா அக்டோபர் 22 அன்று தொடங்கி, அக்டோபர் 27 அன்று நடைபெறும் சூரசம்ஹாரத்துடன் முடிவடைகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வைக் குறிக்கிறது, இதைத் தொடர்ந்து அக்டோபர் 28 அன்று தெய்வானை உடனான திருமணம் நடைபெறும்.
முருகப் பெருமான் சூரனை வதம் செய்து, தேவர்களை காத்தது ஐப்பசி மாத சஷ்டி திதியில் தான் என புராணங்கள் சொல்லப்படுகின்றன. இதை கொண்டாடும் விதமாக ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமையில் துவங்கி, சஷ்டி வரையிலான ஆறு நாட்கள், அனைத்து முருகன் திருத்தலங்களிலும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
இவற்றில் பிரசித்திபெற்றது, முருகப் பெருமான், சூரனுடன் போரிட்டு, வெற்றி கொண்ட திருச்செந்தூர் திருத்தலத்தில் இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் சூரசம்ஹார விழா உலக பிரசித்தி பெற்றதாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசித்து செல்வர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2025ம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் நாள் நடைபெறுவதை முன்னிட்டு 27.10.2025 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி பொதுவிடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 08.11.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஷ்டி விரதம்:
சஷ்டி நாட்களில், முருகப் பெருமானின் அருளை பெறுவதற்காகவும், தங்களின் வாழ்வில் இருக்கும் மிகக் கடுமையான பிரச்சனைகள் தீர வேண்டும் என்றும், தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்றும் பிரதமை துவங்கி சஷ்டி வரையில் மிகக் கடுமையாக விரதம் இருந்து பக்தர்கள் வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இந்த ஆண்டு 48 நாட்கள், 21 நாட்கள், 11 நாட்கள், 6 நாட்கள் விரதம் இருப்பவர்கள் எந்த தேதியில் விரதத்தை துவங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் ஏற்கனவே செப்டம்பர் 10ம் தேதியே தங்களின் விரதத்தை துவக்கி இருப்பார்கள். 48 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்பவர்கள் அடுத்த கட்டமாக 21 நாட்கள் விரதம் இருக்கலாம். இந்த விரதத்தை எப்போது துவக்கலாம் என தெரிந்து கொள்ளலாம்.
விரதத்தின் முக்கியத்துவம்:
- கந்த சஷ்டி விரதம் முருகனை வழிபட்டு, உடல் மற்றும் மனதின் சுத்தத்தை மேம்படுத்தும்.
- இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும்.
- பல பக்தர்கள் 48 நாட்கள் வரை விரதம் மேற்கொள்வது உண்டு.
- அதிகாலையில் எழுந்து குளித்து, முருகப் பெருமானின் படத்தை அலங்கரித்து, விளக்கேற்றி விரதத்தை துவங்க வேண்டும்.
- முழு நாள் உபவாசமாக இருக்கலாம், அல்லது பால், பழம் போன்ற சத்தான உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். \
- முருகனை மனதார வேண்டி, அவருடைய மந்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்யலாம்.
சஷ்டி நாட்களில் முருகனை துதித்து அவரது அருளை பெற்று வாழ்வில் முன்னேறுங்கள்.