சென்னை: கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் இணையதளங்கள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே சென்னையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில், , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டமில்லா பயண அட்டைகள் முதற்கட்டமாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், இணையதளம் வாயிலாக (Online) பெற்றிடும் வகையில், 07.09.2023 முதல் செயல்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகள் அனைவரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை இணையதளம் வழியாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியினை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப் படுத்த தேவையான மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) வழியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து இறுதிப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறிய அமைச்சர் சிவசங்கர், இதனை முழுமையாக செயல்படுத்த, போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 30/09/2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை, 31/10/2025 வரை மேலும் ஒரு மாத காலத்திற்க்கு நீட்டித்து பயணிகள் சிரமுமின்றி பயணம் செய்யலாம் என கூறியுள்ளார்.
ஏற்கனவே சட்டமன்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பயனாளிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, பெற்றிட வழிவகை செய்யப்படும் என அறிவித்ததன் அடிப்படையில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு பயணியர் மற்றும் பொருள் போக்குவரத்துக் கழகம் (TNMLC) தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளி கள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டைகளை பெறும் வசதி, அமல்படுத்தப்பட்டது.
பயனாளிகள், இத்திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமுமின்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 2025-26 ஆம் நிதி ஆண்டில் இணையதளம் வாயிலாக பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க ஏதுவாகவும், இவ்வசதியினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பயனாளிகளும் பயன் பெறும் வழியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் (விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி) விரிவு படுத்த ஏதுவாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில் ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 30/09/2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, 31/10/2025 வரை, மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.