சென்னை: தமிழ்நாட்டுக்கு தொழில்முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து பயணம்  சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பயணம்  முடிந்து இன்று  காலை சென்னை திரும்புனார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் என முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க ஏற்கனவே 4 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், 5வது முறையான ஆகஸ்டு  30ந்தேதி மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். ‘தமிழ்நாடு வளர்கிறது’ (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான இந்த பயணம் லண்டன், ஜெர்மனிக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஜெர்மனி சென்றவர், பின்னர் இங்கிலாந்து சென்றார்.

ஆகஸ்டு 30-ந் தேதி சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட முதல்வர் அங்கு, முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். பின்னர் அவர், ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 2-ந் தேதி லண்டன் சென்றார். அங்கு அந்நாட்டு மந்திரியும், நாடாளுமன்ற துணை செயலாளருமான (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடும், இங்கிலாந்தும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.   தொடர்ந்து அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும் சந்தித்து பேசினார்.

பின்னர்,   லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை  திறந்து வைத்தார். லண்டன் ஆக்ஸ்போர்டு வால்டன் தெருவில் அமைந்துள்ள தமிழின் பெருமையை உலகறிய செய்த மேலைநாட்டு தமிழறிஞர் ஜி.யு.போப்பின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதையடுத்து,  சட்ட மேதை’ அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார். ‘தத்துவ ஞானி’ என்று போற்றப்படும் கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், தனது 10 நாட்கள் வெளிநாடு பயணங்களை முடித்து விட்டு,   லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார். துபாய் வழியாக அவர் இன்று (திங்கட்கிழமை) காலை 8.05 மணியளவில் சென்னை விமானம் நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் வாயில் அருகே அவரை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் வரவேற்றனர். மேலும் அவருக்கு தி.மு.க. சார்பிலும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.