நாகை: நாகை கடற்கரையோரம் அமைந்துள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய 10நாள் ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இதையொட்டி, அங்கு பல ஆயிரம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இதையொட்டி, நாகை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று விழா தொடங்குகிறது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இன்று (29ம் தேதி) மாலை 6 மணிக்கு கொடியேற்றதுடன் தொடங்குகிறது. தஞ்சை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார். தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர்வாதம், தமிழில் திருப்பலி நடைபெற இருக்கிறது.
விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் , அருட்சகோதரரிகள் பங்குபெறுகிறார்கள். தொடர்ந்து திருவிழாவின்போது தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.
இதையொட்டி, தமிழ்நாட்டின் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த சிலநாட்களாகவே பாதயாத்திரையாக ஏராளமானோர் சென்றுகொண்டிருக்கின்றனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் நடைபயணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழியாக வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர். பலர் வேளாங்கண்ணி மாதா உருவம் பொறித்த கொடிகளை ஏந்தியும், திருவுருவச்சிலையுடன் கூடிய தேரை இழுத்துக்கொண்டும் செல்கின்றனர். அவ்வாறு வருவோர்அங்குள்ள மாதா சொரூபத்தை வழிபட்டு, இன்று கொடியேற்றத்தை கண்டு, பிரார்த்தனையில் பங்கேற்க முகாமிட்டு உள்ளனர்.

கோவில் திருவிழாவையொட்டி, கடற்கரை சாலை, கடைவீதி, வேளாங்கண்ணி புனித அன்னை தேவாலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கொடியேற்றம்:
ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும்.