மாமல்லபுரம்: பாமக பொதுக்குழுவில் அன்புமணி மேலும் ஓராண்டு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்கட்சி தேர்தல், திமுகவை வீழ்த்த வேண்டும், பழைய ஓய்வூதியம் உள்பட 19 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.

பாமகவை கைப்பற்றுவதில் பாமக நிறுவனா் ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி இடையே கடந்தசில மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. இதன் உச்சபட்சமாக, இன்று பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் கூடியுள்ளது. இந்த கூட்டத்தில், அன்புமணி உள்பட 40 பேருக்கு இருக்கைகள் போடப்பட்ட நிலையில், நிறுவனர் ராமதாஸுக்கு தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.
பொதுக்குழு கூட்ட மேடைக்கு வந்தபோது, அன்புமணி, நாளைய தமிழகம் யார் என கேள்வி எழுப்ப, அன்புமணி என பொதுக்குழுவில் பங்கேற்றிருந்தவர்கள் பதில் கொடுத்தனர். பாமக பொதுக்குழு கூட்டத்தில் 100 சதவீத உறுப்பினர்கள் வந்திருப்பதாக கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் வழியில் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம், அதற்கு எல்லோரும் ஒன்றுபடுவோம் என்று முழக்கம் எழுப்பப்பட்டது.
திமுக அரசை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வீழ்த்த பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மனங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இதில் மொத்தமாக 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- அன்புமணி ராமதாஸ், பொது செயலாளர் வடிவேல் ராவணன் பொருளாளர் திலகபாமா ஆகியோர் அடுத்த ஆண்டு 2026 ஆகஸ்ட் மாதம் வரை தொடர்வார்கள்.
- வன்னியர்களுக்கு விரைவில் இட ஒதுக்கீடு செய்யாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
- தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அதே நாள் விடுதலை நாளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றோம்
- சமூக நீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம்.
- பாமக தலைவர் உரிமை மீட்பு பயணம் வெற்றி பெறச் செய்ய பாட்டாளி மக்கள் கட்சி உறுதி அளிக்கிறது.
- பெண்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றாததை கண்டித்து கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்
- தமிழ்நாட்டில கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முழுமையாக தடை விதிக்க அரசை வலியுறுத்துவது.
- தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைபடுத்துவது.
- தமிழ்நாட்டில் நான்கு முறை உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்
- தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
- காவேரி கொள்ளிடம் பாலாறு அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகளை கட்டுவது
- காவிரி கோதாவரி நதிகளை இணைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்
- தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் (2151 கோடி)
- அரசு பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்
- 9000 உதவி பேராசிரியர்கள் மற்றும் நியமிக்க வேண்டும், அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க வேண்டும்
- மக்களை ஏமாற்றும் மோசடி திட்டங்களையும் செயல்படுத்தும் திமுக அரசுக்கு இந்த பொது குழு வாயிலாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
- பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நடத்தி தர வேண்டும்
- 6.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு துறையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்
- சிங்கள கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.