டாக்கா
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 6 மாத சிறை தண்டனை அளித்துள்ளது.

கடந்த 2024 ஆகஸ்ட் 5 அன்று, ஊரடங்கு உத்தரவை மீறி டாக்கா வீதிகளில் போராட்டக்காரர்கள் திரண்டதால், ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, டாக்காவில் உள்ள தனது இல்லத்தை காலி செய்து, இந்தியாவில் உள்ள ஒரு ரகசிய இடத்திற்கு புறப்பட்டார். அவர் பயணித்த ஹெலிகாப்டர் இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பிறகு, சிறிது நேரம் வட்டமிட்டு, பின்னர் அகர்தலாவில் உள்ள பி.எஸ்.எஃப் ஹெலிபேடில் தரையிறங்கியது.
வங்கதேசத்தில் கடந்த ஜூலை 2024-ல் நடைபெற்ற நாடு தழுவிய கிளர்ச்சியின் போது நடந்த சம்பவங்களில் ஷேக் ஹசீனாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த மாதம் அவருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
டாக்கா ட்ரிப்யூன் அறிக்கைகளின்படி, தலைமை அரசு வழக்கறிஞர் முகமது தாஜுல் இஸ்லாம் மற்றும் அவரது குழு சமர்ப்பித்த குற்றச்சாட்டுகள், 2024 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த வன்முறை ஒடுக்குமுறைக்கு பின்னணியில் ஷேக் ஹசீனா முக்கிய தூண்டுதலாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேற்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி உள்ளது. வங்க தேசத்தின் பிரதமர் பதவியிலிருந்து விலகி 11 மாதங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய அவாமி லீக் தலைவரான ஷேக் ஹசீனாவுக்கு ஒரு வழக்கில் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.