சென்னை:  மாணவ மாணவிகளுக்கான 3வது கட்ட பரிசளிப்பு விழாவில் பேசிய நடிகரும், தவெக தலைவருமான விஜய், தன்னை இளைய காமராசர் என அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து தொடர்ந்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருது வழங்கும் விழா மூன்றாவது ஆண்டாக  இந்த ஆண்டும் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே  முதல்கட்டமாக மே 30, இரண்டாம் கட்டமாக ஜூன் 4 பரிசளிப்பு விழா நடைபெற்ற நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் இன்று மூன்றாம் கட்ட நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், குஜராத் விபத்தின் புகைப்படங்கள், விடியோக்களை பார்ப்பதற்கு மனம் பதறுகிறது, அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை எனத் தெரிவித்தார். தொடர்ந்து, குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் பெற்றோர்கள், மாணவர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய், தன்னை இளைய காமராசர் என்று அழைக்க வேண்டாம், 2026 தேர்தல், அரசியல் பற்றியெல்லாம் இந்த மேடையில் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும், தங்களின் பள்ளி, ஆசிரியர்கள் பற்றி பேசுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.

ஏற்கனவே  மே 30 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயை இனி அனைவரும் இளைய காமராசர் என்று அழைக்க வேண்டும் என்று கல்வி விழாவில் விருது பெற்ற மாணவரின் பெற்றோர் பேசிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, காமராஜரை போற்றும் நாடார் இன மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய் எதிராக போராட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில்,  தன்னை இளைய காமராசர் என அழைக்க வேண்டாம் என்று  மாணவர்கள், பெற்றோர்கள் என தனது கட்சி நிர்வாகிகளுக்க விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.