வாஷிங்டன்: ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின்படி, இந்திய விண்வெளி வீரர் உள்பட 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பும் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் ஒத்திவைக்கப்படுவது இது 5வது முறையாகும்.

ஏற்கனவே ஜுன் 10ந்தேதி ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலை காரணமாக, அந்த திட்டம் ஜூன் 11ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக நாசா அறிவித்தது. அதன்படி, நேற்று மாலை இந்த திட்டத்தின்படி, விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட சோதனையின்போது ஃபால்கன் 9 ராக்கெட்டின் உந்துவிசை அமைப்பில் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டு உள்ளது.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான ‘இஸ்ரோ’ இணைந்து, 2025ல், ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை இன்று விண்வெளிக்கு அனுப்புகிறது. அதன்படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்கின்றனர். இந்த 4 பேர் கொண்ட விண்வெளிக்குழு, விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் வாயிலாக இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், டெக்னிக்கல் பால்ட் மற்றும் வானிலை காரணமாக ஏற்கெனவே 4 முறை ஒத்திவைக்கப்பட்டு இன்று (ஜூன்11) மாலை 5.30 மணிக்கு ஏவப்படவிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 5வது முறையாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.