டெல்லி: நிதிஆயோக் கூட்டத்தில் தமிழக நிதி தேவைகளை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டத்திற்கு பின்பு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லி பாரத் மண்டபத்தில்  நடைபெற்ற 10வது நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்துகொண்டு, தங்களது மாநில தேவைகளை எடுத்துரைத்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், ‘மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத உரிமைப் பங்கை வழங்க வேண்டும், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும், காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளை சுத்தம் செய்ய திட்டம் வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கூட்டம் முடிந்த பிறகு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த  பிரதமர் மோடி கொடுத்த நேரத்தின்படி,  இன்று மாலை சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு மாநில முதல்வர்களும் தனித்தனியே பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசி வருகின்றனர்.