பெங்களூரு

பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் மீது வேன் ஒன்று மோதி உள்ளது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், ஊழியர்களை கொண்டு சென்று விடவும், அங்கிருந்து அழைத்து வரவும் வேன் பயன்படுத்தப்படுகிறது.

விமான நிலையத்தில் நேற்று பகல் 12.15 மணிக்கு விமான நிலைய ஊழியர்களை அழைத்து வரும் வேன் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பகுதியில் சென்றபோது அங்கு வாகன நிறுத்த (பார்க்கிங்) பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானத்திற்கு அடியில் அந்த வேன் சென்றது.

இதனால் விமானத்தின் மூக்கு பகுதியில் வேனின் மேற்பகுதி உரசியதில் அந்த விமானத்தின் பகுதி லேசாக சேதம் அடைந்தது. இதையொட்டி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் மீது மோதிய வேனில் டிரைவர் தவிர வேறு யாரும் இல்லை என்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.விபத்து துகுறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.  வேன் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.