டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையிலேயே குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

டெல்லியில் நேற்று (ஏப்.18)  திடீரென கனமழை கொட்டியது. திடீர் கோடை மழை காரணமாக டெல்லியின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையின் , டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இன்று (ஏப்.19) அதிகாலை நான்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த  சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து வீட்டை விட்டு வெளியே சத்தம் வந்த திசை நோக்கி பார்த்தனர். அங்கு கட்டிடம் இடிந்து விழுந்ததும், அதனுள் சிக்கிய பல பல குடும்த்தினரின் அலறல் சத்தம் கேட்டது. இது குறித்து  அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். மேலும் அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு,  கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

இதற்கிடையில்,  போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொண்டனர். இதில், இடிபாடுகளில் சிக்கி  4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்தை ஆய்வு செய்த  வடகிழக்கு மாவட்ட கூடுதல் துணை ஆணையர் சந்தீப் லம்பா  இந்த இடிபாடுகளுக்குள் மேலும் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என கூறினார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Photos: Thanks ANI