டெல்லி
பயங்கரவாதி ராணா அமெரிக்காவில் இருந்து விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இச்சம்பவத்தில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா தொழில் அதிபர் தஹாவூர் ராணாவுக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹட்லியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இவர்.கடந்த 2009-ம் ஆண்டு தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அப்போது லஷ்கர்-இ-தொய்பாவுக்கு ஆதரவு அளித்ததற்காக அவருக்கு அமெரிக்க கோர்ட்டு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தற்போது லாஸ்ஏஞ்சல்சில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டு உள்ள அவரை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியா அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தது. அமெரிக்கா இதை ஏற்றுக்கொண்டது. ராணா இதை எதிர்த்து ராணா தாக்கல் செய்த மனுக்களை அமெரிக்க மாவட்ட நீதிமன்றமும், அமெரிக்க உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.
அமெரிக்காவில் ராணாவின் சட்டப்பூர்வ வாய்ப்புகள் முடிந்து விட்டதால் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவது கிட்டத்தட்ட உறுதியானது. டெல்லியின் திகார் மற்றும் மும்பையின் ஆர்தர் சாலை சிறைச்சாலையில் உள்ள உயர் பாதுகாப்பு பிரிவுகள் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா வரும் ராணா டெல்லி திகார் சிறை அல்லது மும்பை சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு சிறைகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ராணா இந்தியா வந்தவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.