மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா விரைவில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசாங்க வட்டாரங்களின்படி, இந்தியாவின் பல்வேறு விசாரணை அமைப்புகளைக் கொண்ட ஒரு குழு அமெரிக்காவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது, அமெரிக்க அதிகாரிகளுடன் அனைத்து ஆவணங்கள் மற்றும் சட்டப்பூர்வ வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடை விதிக்கக் கோரிய ராணாவின் மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த மாதம் நிராகரித்தது.

இதையடுத்து ராணாவை இந்தியாவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் தற்போது இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராணா விரைவில் நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

ராணா புதன்கிழமை இந்தியாவிற்கு அழைத்து வரப்படவில்லை. இருப்பினும், நாடுகடத்தல் செயல்முறை நடந்து வருவதாக புரிந்து கொள்ளப்படுகிறது.

ராணா தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் உள்ளார்.