சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அரசு எப்படி தலையிட முடியும்? என தமிழ்நாடு அரசுக்கு சென்னைஎ உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஆதரவாக விசிக போன்ற சில கட்சிகள், அவ்வப்போது கோவிலுக்குள் சென்று பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதையடுத்து காவல்துறை உள்ளே சென்று தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், அறநிலையத்துறை பல்வேறு மனுக்களை போட்டு தீட்சிதர்களை அலைக்கழிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

ஏற்கனவே இந்த கோவில் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  ‘சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்கும் அதிகாரத்தில் அரசு தலையிடக்கூடாது  என்றும், அதை நிர்வகிக்கும் உரிமை  பொது தீட்சிதர்களுகு மட்டுமே உ தீர்ப்பு வழங்கி உள்ளது.

இருந்தாலும் தீர்ப்பை மீறி பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றனர்.  இதற்கிடையில்,  சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தர்கள் நின்று தரிசிக்க உதவியதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் நடராஜ தீட்சிதர் என்பவரை பொது தீட்சிதர்கள் குழு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை ரத்து செய்தது. இதை எதிர்த்து பொது தீட்சிதர் குழுவும், அறநிலையத் துறை உத்தரவை அமல்படுத்தக் கோரி நடராஜ தீட்சிதரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று (அக்.21) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது தீட்சிதர்கள் குழு தரப்பில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க பொது தீட்சிதர்கள் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அதில் அறநிலையத் துறை தலையிட முடியாது,’ என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘நடராஜர் கோயிலை நிர்வகிக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், நடராஜ தீட்சிதர் இடைநீக்க விவகாரத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?’ எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர், நடராஜ தீட்சிதரின் இடைநீக்க காலம் ஏற்கெனவே முடிந்து விட்டது என்றும், தற்போது அவர் தில்லை காளியம்மன் கோயிலில் பணிபுரிந்து வருவதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இரு வழக்குகளையும் முடித்து வைத்தார்.

அதேசமயம், நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அறநிலையத் துறை தலையிட அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதை இரு நீதிபதிகள் அமர்வின் முடிவுக்கு விட்டு விடுவதாகவும் நீதிபதி தண்டபாணி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.