வாஷிங்டன்

சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து வாக்களிக்க உள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஸ்டார் லைனர் விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டது. எனவே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யபட்டபோதும் இருவரையும் ஸ்டார் லைனர் விண்கலத்திலேயே பூமிக்கு அழைத்து வரவேண்டாம் என நாசா முடிவெடுத்தது. இவ்விருவரையும் பூமிக்கு கொண்டுவர எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் பயன்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் க்ரு டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்படும்போது  இந்த விண்கலம் மூலம் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நேரடியாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது சுனிதா வில்லியம்ஸ்,

“விண்வெளி மையத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அனைத்துக்கும் தயாராகவே வந்திருக்கிறேன். நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிப்பது குடிமக்களாகிய நமக்கு ஒரு மிக முக்கியமான கடமையாகும். நான் விண்வெளியில் இருந்து வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”

என்று கூறியுள்ளார்.