சென்னை

நேற்றிரவு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது .

திடீர் எனஅவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அவர் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.

அவருக்கு இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதில் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு அவரது டிஸ்சார்ஜ் பற்றி முடிவு செய்யப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

நேற்று மாலை செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இருந்து நேற்றிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் மீண்டும் புழல் சிறைக்கு அடைக்கப்பட்டுள்ளார்.