சென்னை

மிழகத்தில் சுயேச்சை வேட்பார்களை விட நோட்டா அதிக அளவில் வாக்குகளைப் பெற்றுள்ளது.

இன்று காலை 8 மணி முத்ல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. ஆனால் அதன் கூட்டணி கட்சியான பாமக தருமபுரி தொகுதியில் முன்னிலையில் இருந்தது. தற்போது இந்த முன்னிலை நிலவரமும் மாறி மாறி வருகிறது. எனவே அனைத்து தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.

எதிர்க்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் வரவில்லை. தமிழகத்தில் கட்சிகள் அல்லாதவர்கள் 21% வாக்குகள் வாங்கியுள்ளனர். இதில் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் இதர கட்சிகள் வாக்கு சதவீதத்துடன் நாதக வாக்கு சதவீதமும் அடங்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றுள்ளது. திண்டுக்கல் தொகுதியில் அதிகபட்சமாக நோட்டாவில் 17495 வாக்குகள் பதிவாகியுள்ளன. நோட்டாவில் 299448 வாக்குகள் இதுவரை பதிவாகி பெரும்பான்மையான தொகுதிகளில் 5வது இடத்தை  பிடித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை என தெரியவருகிறது.

2019 மக்களவைத் தேர்தலில் பீகாரில் மட்டும் 8,16,950 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் 7,25,097 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளது. மூன்றாவதாகத் தமிழகத்தில் 5,50,577 வாக்குகள் நோட்டாவுக்காக பதிவாகி இருந்தது. இந்த முறை எத்தனை பேரின் வெற்றி தோல்வியை நோட்டா புரட்டிப் போடப் போகிறது என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தான் தெரியவரும்.