சென்னை

சென்னை சென்டிரல் – ஆவடி உள்ளிட்ட சில இரவு நேர ரயில் சேவைகள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில் வே அறிவித்துள்ளது.

தென்னக ரயில்வே ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,

”சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வருகிற 16-ந்தேதி சென்டிரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்டிரலில் இருந்து ஆவடிக்கு இரவு 11.30, 11.45 மணிக்கு புறப்படும் ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இன்று  17-ந்தேதி சென்டிரலில் இருந்து ஆவடிக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.  சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், வரும் 17-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.20, 7.45 மணிக்கு ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

ஆவடியில் இருந்து காலை 4.45, 6.40 மணிக்கு சென்டிரல் செல்லும் மின்சார ரயில்களும், சென்டிரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

வருகிற 17 ஆம்தேதி சென்டிரலில் இருந்து காலை 7.30, 8.35, 10.15 மணிக்கு ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் எழவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு ஆந்திர மாநிலம் கடப்பா செல்லும் மின்சார ரயில், காட்பாடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு திருப்பதி செல்லும் மின்சார ரயில், காட்பாடியில் இருந்து காலை 9.30 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் மின்சார ரயில் வரும் 16-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.