தூத்துக்குடி:
100 சவரன் கையாடல் செய்த வழக்கில் பாஜக பிரமுகர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் வீர மாணிக்கம். இங்கு வீர பத்ரகாளியம்மன், சந்தி அம்மன், சுடலை மாடன் ஆகிய மூன்று கோவில்கள் உள்ளன. இன்று கோவில்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து வருகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு கோவில் நகைகள் சுமார் 100 சவரன் தங்க நகைகளை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கக் கோரி ஊர்மக்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கேட்டு வந்தனர்.
ஆனால் கோவிலை நிர்வாகம் செய்து வந்த பாஜக பிரமுகர் பட்டு ராமசுந்தரம் நகைகளை ஒப்படைக்கவில்லை. இதையடுத்து கிராம மக்கள் நகைகளை மீட்டு நகைகளைக் கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை தக்காா் காந்திமதி தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை செய்த குரும்பூர் காவல்துறை நகைகளைக் கையாடல் செய்த பட்டு ராமசுந்தரம் அவரது சகோதரர்கள் கார்த்திகேயன், முத்து மற்றும் உறவினர்கள் முருகேசன், திருமால், கதிரேசபாண்டியன் ஆகிய 6 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் இவர்களைத் தேடி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel