சென்னை: தமிழகத்திலுள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.ரவி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அப்போது, மத்தியஅரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக்கொள்கை, மாணவர் சேர்க்கை, இடஒதுக்கீடு, கல்வித்தரம்  உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளை அழைத்து பேசி வருகிறார். ஏற்கனவே காவல்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசித்ததுடன், அரசின் திட்டங்கள் குறித்து அறிக்கை தர தலைமைச்செயலாளலை பணித்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது அழைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும்,  உயர்கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.  அதன்படி, இன்று காலை 10:30 மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்,  உயர் கல்வித்துறையின் கீழ் வரக்கூடிய சட்டம், வேளாண்மை, கால்நடை, மருத்துவம், மீன்வளத் துறை உள்பட பல்வேறு துறைகளின் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதில், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது, யு.ஜி.சி.யின் உத்தரவுகளை பின்பற்றுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு மாநிலத்தின் ஆளுநரே  அனைத்து பல்கலைக்கழகத்துக்கும் தலைவர் என்பதால், அவரது ஆணைக்கு கட்டுப்பட வேண்டிய சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது.