சென்னை:
நண்பன் விவேக் தமிழ் திரைத்துறையில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தையும் சேர்த்து தற்போது நிரப்ப வேண்டியுள்ளது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

இன்று இயக்குநர் சுராஜூடன் இணையும் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய வடிவேலு, படத்தில் நடிக்க முடியாத காலகட்டம் போன்று தனக்கு துன்பமயமான காலம் வேறு எதுவும் இல்லை என உணர்ச்சி வசப்பட்டவர், எல்லாரும் தன்னை ‘வைகைப்புயல்’ என்கின்றனர். ஆனால் இந்த கொடுமையான காலகட்டம் தனக்குச் சூறாவளி போன்றது என்று உணர்ச்சி வசப்பட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், எனக்கு எதிராகத் தயாரிப்பாளர் சங்கத்தில் “ரெட் கார்டு” போடவில்லை. வாய்மொழி உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டிருந்தது. பிரச்சினை சுமுகமாகப் பேசி முடிக்கப்பட்டது என்றும், OTT தளங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், யாருடனும் ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
எப்ப தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தேனோ அதற்குப் பிறகு எல்லாமே பிரைட் ஆகிவிட்டது. நல்லது நடக்கும் என நம்புகிறேன் என்று கூறிய அவர், மக்களை இன்னும் சந்தோசப்படுத்திவிட்டுத்தான் எனது உசுரு போகும் என்று உருக்கமாகப் பேசினார்.
நடிகர் விவேக் மறைவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த வடிவேலு, முதலில் நான் அது பற்றித்தான் பேசியிருக்க வேண்டும் என நெகிழ்ந்தவர் திரையுலகில் நண்பன் விவேக்கின் வெற்றிடத்தையும் நிரப்ப வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel