மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கதை திருட்டு புகாரில் சிக்கி உள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தற்போது பயோபிக் படங்களில் ஆர்வம் காட்டுகிறார். ஏற்கெனவே ராணி லட்சுமிபாய் பயோபிக்கான மணிகர்னிகாவில் நடித்தார். தற்போது ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடித்து வருகிறார். இதையடுத்து இந்திரா காந்தியின் பயோபிக்கில் நடிக்க இருக்கிறார்.

இந்  நிலையில் சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டாவின் வாழ்க்கையை படமாக்குவதாக அவர் அறிவித்து இருந்தார். டிட்டாவின் கதை தம்மிடம் உள்ளதை தெரிந்து கொண்டு கங்கனா திரைப்படமாக்க முயற்சிக்கிறார் என்று பிரபல இந்தி எழுத்தாளர் ஆஷிக் கவுல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கங்கனா மீது கதை திருட்டு வழக்கையும் தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் காஷ்மீரின் போர் வீராங்கனையான டிட்டா என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறேன். அதை படமாக்குவதற்காக கங்கனாவை பல தடவை அணுகினேன்.

கதையின் சில பகுதிகளை அவருக்கு மின் அஞ்சலிலும் அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் எனக்கு தெரியாமல் இந்த கதையை திருடி சினிமாவாக தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்று கூறி உள்ளார்.