குஜராத் மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 135 பேர் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக பணிக்கு வராமல் இருந்ததை அடுத்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதில் 50 பேர் வெளிநாடுகளில் வசித்துக்கொண்டு அரசு சம்பளம் வாங்கியது தெரியவந்துள்ளது.

பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த அரச பள்ளி ஆசிரியை பாவனா படேல் கடந்த எட்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி பண்டிகைக்கு மட்டுமே சொந்த ஊருக்கு வந்து செல்லும் நிலையில் அவருக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கி வந்தது குறித்து கடந்த வாரம் தகவல் வெளியானது.

இதேபோல் கனடா நாட்டில் வாசித்துக்கொண்டு தர்ஷன் படேல் என்பவர் சம்பளம் வாங்கிவந்ததாகவும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மாநில கல்வித் துறை மேற்கொண்ட ஆய்வில் பனஸ்கந்தா, கட்ச் மாவட்டங்கள் மட்டுமன்றி மாநில தலைநகர் காந்திநகரிலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

காந்திநகரில் 15 ஆசிரியர்கள் தொடர்ந்து பலமாதங்களாக பணிக்கு வராமல் மாயமானதாக தெரியவந்துள்ளது அவர்களில் 12 பேர் வெளிநாட்டில் குடியேறியதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

கட்ச் மாவட்டத்தில் மட்டும் 17 ஆசிரியர்கள் தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக பணிக்கு வராமல் மாயமானதும் அதில் 15 பேர் பெண்கள் என்றும் மூன்று பேர் வெளிநாட்டில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதில் பலர் சமூக சேவை செய்வதாகவும், சிலர் உடல்நிலை அல்லது சொந்த காரணங்களுக்காக தொடர் விடுப்பு எடுக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானதாகவும் கூறியுள்ளனர்.

இதில் பெண் ஆசிரியர்கள் பலரும் திருமணத்திற்குப் பின் வேறு ஊர்களுக்கு குடியேறவேண்டிய சூழலால் பணிக்கு வரமுடியவில்லை என்று காரணம் கூறியுள்ளனர்.

2015 முதல் 2022 வரை ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மீது இதுபோன்ற புகார் எழுந்ததை அடுத்து நடைபெற்ற விசாரணையில் 180 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் அதில் 150 பேர் வெளிநாட்டில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.