சென்னை: தமிழ்நாட்டின்  14 மாவட்டங்களில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்  அமைக்கப்படும் சட்டப்பேரவையில்  அமைச்சர் சக்கரபாணி  அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

1.அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பயிற்சி பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019இன் கீழ் நுகர்வோரின் உரிமைகள், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்படும்.

2. உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான நுகர்வோர் விழா கொண்டாடப்படும். ரூ.50 லட்சம் இதற்கு செலவிடப்படும்.

3. நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான கருத்துப்பட்டறைகள் ரூ.15 லட்சம் செலவில் நடத்தப்படும்.

4. பொது விநியோகத் திட்டப் பொருட்களின் துரித நகர்வுக்கு போக்குவரத்து வழித்தடங்கள் சீரமைக்கப்படும்.

5. சேமிப்பு கிடங்குகளில் பூச்சிதாக்குதல் தடுப்பு பணிக்காக 2000 புறஊதாக்கதிர் விளக்குப் பொறிகள் ரூ.85 லட்சத்தில் நிறுவப்படும்.

6.100 அமுதம் நியாய விலைக் கடைகள் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.

7. 14 மாவட்டங்களில் ரூ.15 கோடியில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.

8. 22 மாவட்டங்களில் அமைந்துள்ள 31 சொந்தக் கிடங்கு வளாகங்களில் ரூ.40 கோடியில் சுற்றுச்சுவர் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

9.11 சேமிப்பு கிடங்குகளில் மின்னணு எடைமேடைகள் ரூ.2 கோடியே 25 லட்சத்தில் அமைக்கப்படும்.

10. 9 சேமிப்புக் கிடங்குகள் ரூ.22 கோடியே 30 லட்சம் செலவில் புனரமைக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.