சென்னை

சென்னை ஐஐடியில் எல் அண்ட் டி தனியார் நிறுவனத்துடன் இணைந்து 5 ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி நடைபெற உள்ளது.

பிரபல தனியார் நிறுவனமான எல் அண்ட் டி இன்ஃபோடெக் நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் 5 ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பாக  சென்னை ஐஐடியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.   இரு நிறுவனங்களும் இணைந்து கிராமப்புறங்களில் குறைந்த செலவில் 5 ஜி சேவைகள் அளிக்கத் திட்டமிட்டுள்ளன.

சென்னை ஐஐடி டீன் மகேஷ் பஞ்சானுக்லா இதுகுறித்து, “இந்த சென்னை ஐஐடியின்  ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டம், இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியில் திகழும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாகும். 5ஜி செயல்முறை  தொழில்நுட்பத்துக்கு இணையான ஆராய்ச்சியை மேற்கொள்வதே இந்த கூட்டு முயற்சியின் நோக்கம் ஆகும்” என் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை ஐஐடி மின் பொறியியல் துறை உதவிப் பேராசிரியரும் சி எஸ் ஆர் திட்ட முதன்மை ஆய்வாளருமான ராதாகிருஷ்ண காந்தி,, ”தற்போது  இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்கும் பாலமாக 5 ஜி தொழில்நுட்பம் திகழும்.   இத்துறையில் மாணவ, மாணவிகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன” எனக் கூறி உள்ளார்.