சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, 20,378 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும் என அறிவித்த  அமைச்சர் சிவசங்கர்,  வரும்  16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கூறினார். அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் மற்ற ஊர்களுக்கு  14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்று, மீண்டும் திரும்பி வரும் வகையில்,  தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

இதுதொடர்பாக, தலைமைச் செயலகத்தில்  தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்எஸ்.எஸ். சிவசங்கர்   தலைமையில் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.16 முதல் 19 வரை சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன், 5,900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல, பிற நகரங்களில் இருந்து 6,110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
4நாள்களில் மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்த பின்னா், பிற நகரங்களில் இருந்து சென்னை வரும் பயணி களுக்காக அக்.21 முதல் 23 வரை வழக்கமாக இயக்கப்படும் 6,276 பேருந்துகளுடன், 4,253 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், சென்னையைத் தவிா்த்து பிற நகரங்களுக்கு 4,600 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 15,129 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து பயணிக்கலாம்:
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்:புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம், தஞ்சாவூா் மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள். கிளாம்பாக்கம், மாநகர பேருந்து நிலையம்: வந்தவாசி, போளூா், திருவண்ணாமலை மாா்க்கமாக செல்லும் பேருந்துகள்.
கோயம்பேடு பேருந்து நிலையம்:கிழக்கு கடற்கரை (இசிஆா்), காஞ்சிபுரம், வேலூா், பெங்களூரு, திருத்தணி மாா்க்காக செல்லும் பேருந்துகள்.
மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.
வழித்தடம் மாற்றம்:காா் மற்றும் இதர வாகனங்களில் செல்வோா், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், தாம்பரம், பெருங்களத்தூா் வழியாக செல்வதைத் தவிா்த்து பழைய மாமல்லபுரம் சாலை (ஓஎம்ஆா்), கேளம்பாக்கம், திருப்போரூா், செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிச்சுற்று சாலை வழியாகச் செல்லலாம்.
முன்பதிவு மையங்கள்: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 10, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 என 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அக்.16 முதல் 19 வரை காலை 7 முதல் இரவு 9 மணி வரை செயல்படும். இதுதவிர, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள செயலி மற்றும்  இணைதளம் மூலமும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு கூறினார்.