சென்னை: தமிழ்நாட்டில்  திமுக ஆட்சிக்கு வந்து, இதுவரை 200 கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக நபர் மீது சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறி பல கோவில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சாலை விரிவாக்கப்பணிக்காக, சாலையோரம் அமைந்துள்ள கோவில்களும் அகற்றப்பட்டு வருகிறது.  இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், பல இடங்களிலும் பொதுமக்கள் அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து போராட்டங்கள் நடத்தியதும் தெரிந்ததே. ஆனால்,  அரசு நிலங்கள் மற்றும் காவல்வாய் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டுப்பட்டுள்ள மற்ற மதத்தினரின் வழிபாட்டுத்தலங்களை இடிக்க முன்வராதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்து முன்னணி சார்பில், திமுக ஆட்சிக்கு வந்ததும், 130 நாட்களில் 200 கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளதாக தீர்மானம் போட்டு உள்ளது. அதில்,  தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பின்னர் இந்துக்களின் கோயில்கள் மட்டும் குறிவைத்து இடிக்கப்பட்டு வருகிறது. தி. முக -வின் 200 நாள் ஆட்சியில் 130 கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்து உள்ளது.

தெய்வீக பூமியாக விளங்கும் தமிழகத்தில் திமுகவின் இந்து விரோத ஆட்சி வந்தவுடன் நூற்று முய்பதுக்கும் மேற்பட்ட கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. ஓட்டு வங்கியான சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்துவதற்கான செயலாக இது தெரிகிறது. ராமானுஜர் வாழ்ந்த ஸ்ரீ பெரும்புதூரில் அனைத்து மக்களும் வழிபாடு நடத்தி வந்த கனக காளீஸ்வரர் கோயிலை எந்த முன் அறிவிப்புமின்றி காஞ்சிபுரம் மாவட்ட DRO பன்னீர்செல்வம் மூலஸ்தான சிவலிங்கத்தை இடிக்கமாட்டேன் என்றுகூறிவிட்டு மக்களை ஏமாற்றி தனது அதிகார துஷ்பிரயோகத்தால் இரண்டூ ராட்சச இயந்திரத்தை வைத்து கோயில் மற்றும் சாமி சிலைகளை கூட இடித்து தரைமட்டமாக்கிவிட்டார்.

கோவை மாநகரில் 8 கோயில்களும் நாமக்கல் திருச்செங்கோடு தெப்பக்குள விநாயகர் கோயில், மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள கோயில், தாம்பரம்அருகே கஸ்பாபுரம் வனதுர்கை கோயில் என நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள்.இந்து விரோத திமுக அரசால் இடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அரசு இடத்தில் பல நூறு சர்ச், மசூதிகள் உள்ளன.  நீதிமன்றம் அவற்றை அகற்ற ஆணைப் பிறப்பித்தும் இடிக்காமல் இருக்கிறது. உதாரணமாக அச்சிறுப் பாக்கம், ஸ்ரீ பெரும்புதூர், பென்னூர் கீழ்கட்டளை பகுதிகளில் சர்ச்ஆகியவற்றை இந்த அரசு ஏன் அகற்றவில்லை ?

ஆகவே, வருவாய் துறையும், தமிழக அரசும் திட்டமிட்டு இந்துக்கோயில்களை மட்டும் இடிக்கும் முடிவை கைவிட வேண்டூம் என இந்து முன்னணி கேள்விகளை முன்வைத்துள்ளது. அதே போன்று மீண்டும் ஒரு சம்பவம் கோவை மாவட்டம், சூலூரில் உள்ள வாசுதேவர் கோயில் இடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த வினோஜ் பி. செல்வம் இதுகுறித்து டிவிட் பதிவிட்டிருந்தார். அதில், சுதந்திரப் போரைக்காட்டிலும், இந்து மதம் இப்போதுதான் அதிகம் நசுக்கப்படுகிறது என்று விமர்சித்து இருந்தார்.

இதையடுத்து வினோஜ் பி செல்வம் மீது தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

வினோஜ் பி செல்வம் மாநில பாஜக இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார். இவர் மீது பிரிவு 153, 505 (1)(b), 505(2) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத அடிப்படையில் மக்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்பியதாக சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.