சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 7 ஆண்டுக்குள் ரூ. 77 ஆயிரம் கோடி செலவில் 14500 கெமாவாட் திறன் கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதிஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  2030ம்‌ ஆண்டிற்குள்‌ 33,000 மெகாவாட்‌ அளவிற்கு மாநிலத்தின்‌ உற்பத்தித்‌ திறனை உயர்த்தி மாநிலத்தில்‌ மின்‌ உற்பத்தியினை இரட்டிப்பாக்க அரசு முடிவு செய்துள்ளது.

2030-ம்‌ ஆண்டுக்குள்‌ மொத்த மின்‌ உற்பத்தியில்‌ 50 சதவீதத்துக்கும்‌ மேல்‌ புதுப்பிக்கத்தக்க ஆற்றலின்‌ பங்களிப்பு இருக்கும்‌ வகையில்‌ பசுமை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு சிறப்பு நிறுவனம்‌ ஒன்றை அரசு உருவாக்கும்‌.

மேலும்‌, மாநிலத்தில்‌ நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளின்‌ செயல்திறனை மறுசீரமைக்க புதிய கொள்கை ஒன்றும்‌ வகுக்கப்படும்‌.

மாநிலத்தின்‌ உச்சநேர மின்‌ தேவையை நிறைவு செய்வதற்காக அரசு – தனியார்‌ பங்களிப்புடன்‌ (PPP) நீரேற்று மின்‌ திட்டங்கள்‌ நிறுவப்படும்‌. குந்தாவில்‌ கட்டப்பட்டு வரும்‌ 500 மெகாவாட்‌ திறன்கொண்ட புனல்‌ மின்‌ திட்டம்‌ 2024–25ம்‌ ஆண்டிற்குள்‌ செயல்பாட்டிற்கு வரும்‌.

மேலும்‌, 2030ம்‌ ஆண்டுக்குள்‌, 77,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ 14,500 மெகாவாட்‌ திறன் கொண்ட 5 புதிய நீரேற்று மின்‌ திட்டங்கள்‌ அரசு – தனியார்‌ பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்படும்‌. மாநிலத்தில்‌ நீரேற்று மின்‌ திட்டங்களில்‌ முதலீடுகளை ஊக்குவிக்க ஒரு விரிவான கொள்கையை அரசு வகுக்கும்‌. மேலும்‌, தற்போது நடைபெற்று வரும்‌ 4100 மெகாவாட்‌ அனல்‌ மின்‌ திட்டப்‌ பணிகள்‌ விரைந்து முடிக்கப்படும்‌.

அரசால்‌ மேற்கொள்ளப்பட்ட அடிப்படைச்‌ சீர்திருத்தங்களின்‌ விளைவாக, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ நிதிநிலை சற்று மேம்பட்டுள்ளது. இதனால்‌, இக்கழகத்தின்‌ இழப்பு 2021–22 ஆம்‌ ஆண்டில்‌ 11,955 கோடி ரூபாயிலிருந்து நடப்பாண்டில்‌ 7,825 கோடி ரூபாயாகக்‌ குறைய வாய்ப்புள்ளது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்திற்கு அரசால்‌ வழங்கப்படும்‌ மானியங்களுக்காக 14,063 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிதியமைச்சர் கூறினார்.