சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வங்கக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு அவ்வப்போது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி மீனவர்கள் போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் எப்போதும்போல கடிதங்களை மட்டுமே எழுதி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள்விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடலோர காவல் படையினர், அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி 3 மீனவர்களையும் கைது செய்து படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர், 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர், அவர்கள் 10 பேரையும் கைது செய்து 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதையடுத்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் ஏற்பட்ட முடிவை தொடர்ந்து, இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரையும் நேற்று (ஏப்ரல் 1ந்தேதி) விடுதலை செய்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 13 மீனவர்களுக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கினர். பின்னர் 13 மீனவர்களுக்கும் இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து நேற்று நள்ளிரவு சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த 13 மீனவர்களையும் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அவர்கள் அனைவரையும் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை அதிகாரிகளிடம் உடனடியாக தங்களது படகுகளையும் மீன் பிடி வலைகளையும் மத்திய மாநில அரசு மீட்டு தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.