சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றுமுதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. இன்று நீர்வளத்துறை தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த (மார்ச்) 14ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம்2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து மறுநாள் (மார்ச் 15ந்தேதி) அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 21-ம் தேதி நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்தனர்.
இதனையடுத்து சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சட்டப்பேரவைக்கும் விடுமுறை.இதைத்தொடர்ந்து இன்று (மார்ச் 24)அவை மீண்டும் கூடுகிறது.
இந்த நிலையில், துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று (மார்ச் 24) தொடங்குகிறது. இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் ஆரம்பமாகிறது. அப்போது கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். தொடர்ந்து துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்.
இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசுகின்றனர். பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளிப்பார். அத்துடன் இத்துறையின் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார். அதையடுத்து இதர துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும். அதற்கு அந்தந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்.30-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது.