சென்னை

சென்னை வடபழனியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்ப்பிடித்ததால் கடும் பரரப்பு ஏற்பட்டது.

சென்னை மண்ணடி பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்த கோதர்ஷா முகமது நசீப் என்பவருடன் நேற்று இரவு, வளசரவாக்கத்தில் இருந்து மண்ணடி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். வடபழனி ஆற்காடு சாலை மாநகராட்சி பூங்கா அருகே சென்றபோது, காரில் இருந்து புகை வந்துள்ளது.

புகையைப் பார்த்த வாகன ஓட்டி ஒருவர், காரில் தீப்பிடித்துள்ளதாக கோதர்ஷாவிடம் கூறியுள்ளார். காரில் இருந்த இருவரும் உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆயினும் அதற்குள் தீ மளமளவென பரவியதால், கார் முழுவதும் எரிந்து நாசமானது.

விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். காரில் இருந்த இருவரும்  சரியான நேரத்தில் காரை விட்டு கீழே இறங்கியதால்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதன் காரணமாக ஆற்காடு சாலையில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.