வாட்ஸ்அப் அஞ்சலி
வாட்ஸ்அப் அஞ்சலி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஏ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா 16.3.11 அன்று  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆ. ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா. இவரும் நெருங்கிய நண்பர்கள். சென்னையில் கிரீன் ஹவுஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார் சாதிக்.
ராசா, மத்திய அமைச்சரான பின்னர்தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது என்பதால் சாதிக்கும் ஸ்பெக்ட்ரம் விசாரணை வளையத்தின் கீழ் வந்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய மத்திய அமைச்சர் ராசா, பதவியையும் இழந்தார்.  தொடர்ந்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிரடி ரெய்டுகளை நடத்தியது. ரெய்டுக்குள்ளானவர்களில் சாதிக் பாட்சாவும் ஒருவர்.
பெரம்பலூர் போஸ்டர்
பெரம்பலூர் போஸ்டர்

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் இருந்த  தனது வீட்டில் பாட்சா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தன்று அவரது அறை நீண்ட நேரமாக மூடியிருந்தது. இதையடுத்து  அவரது உறவினர்கள், அறைக் கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தனர். சாதிக்பாட்சா, உயிரற்ற உடலாக தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.
உடனடியாக அவரது உடலை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாதிக் பாட்சா ஒரு முக்கிய நபர் என்பதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் அப்ரூவராக திட்டமிட்டிருந்தார் என்று ஒரு தகவல் பரவி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “சிபிஐ விசாரணை பெரும் மன உளைச்சளை ஏற்படுத்தியது” என அவர் கடிதம் எழுதி வைத்திருந்தாகவும் கூறப்பட்டது.
அவர் மறைந்த, ஐந்தாவது நினைவு தினம் இன்று.
நாளிதழ் அஞ்சலி
நாளிதழ் அஞ்சலி

நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராஜாவின் சகோதரர் உள்ளிட்டோர் பங்குதாரர்கள். இதில் சாதிக் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு உரிய பங்கு தரப்படவில்லை என்றும் சாதிக் குடும்பத்தினர் அதிருப்தியில் இருக்கின்றனர் என்றும் தகவல் பரவியது.
தற்போது  அந்த நிறுவனத்தில் உள்ள சாதிக் சொத்துக்களை திரும்பத்தர வேண்டி, கம்பெனி லா போர்டில் சாதிக்கின் மைத்துனர் வழக்கு தொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்  சாதிக்பாட்சா நினைவுதினமான இன்று, அவரது படத்துடன் “செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயே..” என்ற வாசகத்துடன் வாட்ஸ்அப்களில் பதிவு ஒன்று வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதே வாசகத்துடன் பெரம்பலூர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாகவும் வாட்ஸ் அப்பில் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
அதே நேரம், இன்றைய நாளிதழ்களில் சாதிக் நடத்திய கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனம் சார்பாக ஒரு நினைவஞ்சலி வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மேற்குறிப்பிட்ட வாசகங்கள் ஏதும் இல்லை.