டெல்லி

நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

இம்றை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2 ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

நாளை 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு 4 ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியபிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்குவங்கம் (8) ஜம்மு-காஷ்மீர் (1) என மொத்தம் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

4 ஆம் கட்ட தேர்தலையொட்டி காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன நேற்று மாலை 6 மணியுடன் 4ம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது. இங்கு தேர்தல் பிரசாரம் நிறைவடைந்ததால் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளிநபர்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த 4 ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. அதன்படி, ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை (மே 13) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றே ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.