வாஷிங்டன்

புதிய கருத்து கணிப்பின்படி அமெரிக்க அதிபராக கமலா மற்றும் டிரம்ப் ஆகிய இருவருக்குமே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வரும் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்லில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். \ ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் (59) களமிறங்கி உள்ளார்.

பிலடெல்பியாவில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே நடைபெற்ற நேரடி விவாதம் கமலாவுக்கே சாதகமாக அமைந்தது என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. தற்போது எஸ்.எஸ்.ஆர்.எஸ். என்ற நிறுவனத்தின் சார்பில் சுமார் இரண்டாயிரம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட புதிய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

இந்த முடிவுகள் மூலம் கமலாவுக்கும், டிரம்புக்கும் மிக நெருக்கமான விகிதத்தில் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது. இதில் தெளிவான ஒரு வெற்றியாளரை அடையாளம் காண முடியவில்லை என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது.

புதிய கருத்து கணிப்பின்படி, அமெரிக்காவில் 48 சதவீதம் பேர் கமலாவுக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதே போல் டிரம்புக்கு 47 சதவீதம் பேர் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்விரண்டு கட்சிகளையும் சாராத பொதுவான வாக்காளர்களில் 45 சதவீதம் பேர் கமலாவுக்கும், 41 சதவீதம் பேர் டிரம்புக்கும் வாக்கு செலுத்த உள்ளதாக கூறியுள்ளனர்.

இரு கட்சிகளையும் சாராத ஆண்கள் 47 சதவீதம் பேர் டிரம்புக்கும், 40 சதவீதம் பேர் கமலாவுக்கும் ஆதரவாக இருக்கின்றனர். அதே சமயம், இரு கட்சிகளையும் சாராத பெண்களில் 51 சதவீதம் பேர் கமலாவுக்கும், 36 சதவீதம் பேர் டிரம்புக்கும் வாக்கு செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

30 வயதுக்கு குறைவான இளம் வாக்காளர்களில் 55 சதவீதம் பேர் கமலாவிற்கும், 38 சதவீதம் பேர் டிரம்புக்கும் ஆதரவாக உள்ளனர். சுமார்12 சதவீதம் வாக்காளர்கள் இன்னும் தங்களால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.