மும்பை
உத்தவ் தாக்கரே வக்பு மசோதா எதிர்ப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
உத்தவ் சிவ சேனா கட்சியினர் வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி அளிக்கும் அழுத்தமே காரணம் என பாஜக மற்றும் அதன் தோழமை கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
இது குறித்து உத்தவ் சிவசேனா தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம்,
”வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் சில நல்ல கூறுகள் உள்ளன. ஆனால் நீங்கள் வக்பு நிலத்தின் மீது கண்வைத்துள்ள நோக்கம் வேறு.
அந்த நிலத்தை அபகரித்து உங்களது தொழில் அதிபர் நண்பர்களுக்கு கொடுக்க விரும்புகிறீர்கள். இந்த போலித்தனத்தால் நாங்கள் மசோதாவை எதிர்க்கிறோம்.
கோவில் அறக்கட்டளைகள், தேவாலயங்கள், குருத்வாராக்களிடமும் நிலம் உள்ளது. நீங்கள் நாளை இந்த நிலங்கள் மீதும் கண்வைக்கலாம். வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காங்கிரசின் அழுத்தம் காரணம் இல்லை”
என்று விளக்கம் அளித்துள்ளார்.