பரிமலை

ன்று ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

ஆண்டு தோறும் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும்.  மேலும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும்.

இன்று ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாலை 5.30 மணிக்குத் திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார். பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஆடி மாத பிறப்பையொட்டி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். கோவிலில் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும்.

வரும் 21-ந்தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்குக் கோவில் நடை அடைக்கப்படும். தற்போது பக்தர்கள் வழக்கம் போல் இணையம் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கேரள அரசுப் போக்குவரத்து கழகம் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காகத் திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம் திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.