சென்னை; மத்திய அரசின் மிரட்டலுக்கு தமிழ்நாடு அரசு என்றும் அடிபணியாது என  கட்டாய கல்வி உரிமை தொடர்பான வழக்கில்  தமிழ்நாடு அரசு தெரிவித்தள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் குறைவான தொகை மட்டுமே வழங்குவதாக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த விசாரணையின்போது,   2024-2025 ம் ஆண்டு கல்வி கட்டணமாக நிர்ணயித்த கட்டணத்தையும், 2025-2026 ம் கல்வி ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தையும் செலுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசு முறையாக நிதி வழங்கவில்லை என தனியார் பள்ளிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதைத்தொடர்ந்து, தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுமீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு செப்டம்பர் 26ந்தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி எம் தண்டபாணி முன்பு, தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி,    கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை என்றும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி உரிய தொகை வழங்கப்படவில்லை என்று வாதிட்டார்.

இதையடுத்த, வாதாடிய  அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 60 சதவீத நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்றும், 40 சதவீத தொகையை மாநில அரசு வழங்க வேண்டும் என்ற நிலையில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஒத்துக் கொண்டால் மட்டுமே 60 சதவிகித நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தண்டபாணி, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் நிதி கிடைக்கும் அல்லவா? என கேள்வி எழுப்பினார்.

அதை ஏற்க மறுத்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மத்திய அரசின் இந்த மிரட்டலுக்கு தமிழ்நாடு அரசு என்றும் அடிபணியாது, மாநில அரசு இரு மொழி கொள்கையை கடைபிடித்து வருகிறது என்று தெரிவித்ததுடன்,   இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 24 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.