டெல்லி: ரயிலில்  நாசவேலைகளைத் தடுப்பது தொடர்பாக மாநிலங்கள், காவல்துறை, என்ஐஏவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், “ரயில்களைக் கவிழ்க்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மத்திய அரசு மிகுந்த தீவிரத்துடன் கையாள்கிறது என்றும், ரயில்களை நாசப்படுத்த முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக வடமாநிலங்களின் பல பகுதிகளில் ரயில்களை கவிழ்க்க முயற்சிகள் செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில்வே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர், டெட்டேனர்கள் உள்பட  பொருட்கள் வைக்கப்பட்டு, ரயில்களை கவிழ்க்கும் நாசகார வேலைகள் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு  விபத்து தவிர்க்கப்பட்டது.  இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5 முறை ரயில்களை கவிழ்க்க சதி நநடைபெற்றது. அவைகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு உள்ளது. இந்த நாசவேலைகள்  ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலம், சவாய் மாதோபூர் நகரில் ‘கவச்’ எனப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு கட்டமைப்பின் திறனை ஆய்வு செய்வதற்காக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜெய்ப்பூர் சென்றிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  ரயில்களை கவிழ்க்க முயற்சிக்கும் சதித் திட்டங்களை முறியடிப்பதற்காக மாநில அரசுகள், காவல் துறைத் தலைவர்கள், மாநில உள்துறைச் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் என்ஐஏ-வும் பங்கேற்றுள்ளது.

“ரயில்களைக் கவிழ்க்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது எங்கள் கடமையாகும்.  ரயில்வே நிர்வாகமானது ரயில்வே பாதுகாப்புப் படையுடனும் மாநில காவல் துறையுடனும் இணைந்து பணியாற்றி வருகிறது என தெரிவித்தார்.