மைசூரு

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி முடா விவகாரம் தொடர்பான 14 வீட்டு மனைகள திரும்ப ஒப்படைத்துள்ளார்.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு அங்குள்ள பிரதான விஜயநகர் லே-அவுட்டில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டது. அவருக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை அந்த ஆணையம் கையகப்படுத்திக் கொண்டதால், அந்த வீட்டுமனைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நிதிமன்ற உத்தரவின்பேரில் மைசூரு லோக்அயுக்தா போலீசார் முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சாமி, நிலத்தின் முன்னாள் உரிமையாளர் தேவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே விவகாரத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்திருப்பதாக முதல்வர் சித்தராமையா மீது நேற்று முன்தினம் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

எனவே எப்போது வேண்டுமானாலும் சித்தராமையா மற்றும் அவரது மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என்றும், அதுபோல் அவர்களின் வீடுகள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் அமலாக்கத்துறையால் சித்தராமையா கைது செய்யப்படும் நிலையும் உருவாகி இருக்கிறது.

சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து சித்தராமையா மனைவி பார்வதி, நேற்று முன்தினம் இரவு 14 வீட்டு மனைகளை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தாபடி நேற்று சித்தராமையா மனைவி பார்வதி, தனது மகனும், எம்.எல்.சி.யுமான யதீந்திராவுடன் மைசூருவில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு தனக்கு மைசூரு விஜயநகர் பகுதியில் உள்ள 3-வது மற்றும் 4-வது ஸ்டேஜ் பகுதியில் மூடா ஒதுக்கிய 14 வீட்டு மனைகளுக்கான பத்திரப்பதிவை ரத்து செய்யும்படி கடிதம் கொடுத்தார். அதிகாரிகள் அந்த பத்திரப்பதிவை ரத்து செய்தனர். பிறக் பார்வதி, யதீந்திரா ஆகியோர் மைசூரு தேவராஜ் மொகல்லாவில் உள்ள மூடா அலுவலகத்திற்கு சென்று 14 வீட்டுமனைகளுக்கான பத்திரப்பதிவை ரத்து செய்ததற்கான ஆவணங்களை, மூடா ஆணையர் ரகுநந்தனிடம் வழங்கி உள்ளார்.