டெல்லி

உச்சநீதிமன்றம் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான  வழக்கு விசாரணைக்கு தடை விடித்துள்ளது

கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வு பெற்ற டிஜிபி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது. வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020- ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 2019-ம் ஆண்டு ரத்து செய்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தனது மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிந்த வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு,  ஜாபர் சேட்க்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது., இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆக. 23-ம் தேதி அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்று வழக்கின் விளக்கங்களை பெற விசாரணையை ஆக.28-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாபர் சேட் தரப்பு வழக்கறிஞர் ராம் சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து அதில், “சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதித்து, அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

இன்று இந்த வழக்கு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,

“ஜாபர் சேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் விரிவாக விசாரணை மேற்கொள்ள உள்ளது. நவம்பர் 22 ஆம் தேதி அடுத்த கட்ட விசாரணை தொடங்கும். அதுவரையில் ஜாபர் சேட் விவகாரத்தில் அனைத்து விசாரணைக்கும் தடை விதிக்கப்படுகிறது”

என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.