திருவனந்தபுரம்
யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதை போன்று, 9 மாநில சட்டமன்றங்களிலும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென கோரி அம்மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.20) கடிதம் எழுதி இருந்தார்.
முதல்வர் மு க ஸ்டாலின் அந்த கடிதத்தில்
”தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜன.9-ம் தேதி அன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள்-2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள்-2025 ஆகிய இரண்டு வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் போன்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா சட்டமன்றங்களிலும் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்திட வேண்டும். பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து மாநில முதல்வர்களின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.
என்று தெரிவித்திருந்தார்.
இதையொட்டி மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய குழுவின் ( யு.ஜி.சி.) புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தை போல கேரள மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.