டெல்லி: மத ரீதியான அமைப்புகள் ஆக்கிரமிப்பு செய்வதை காட்டிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும்,   “பெண்கள், குழந்தைகள் தெருவில் விடப்படுவது நல்லதல்ல” – உ.பி. அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு எதிராக  உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும், கோயில் அல்லது தர்காவாக இருந்தாலும், சாலைகள் அல்லது ரயில் பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்யும் எந்தவொரு மதக் கட்டமைப்பையும் அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக புல்டோசர் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது.

உ.பி. உள்பட பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றவாளிகள், ஆக்கிரமிப்பாளர்கள், பாலியல் குற்றவாளிகள் போன்றவர்களின் வீடுகள் உடன்டியாக இடித்து தரை மட்டமாக்கப்படுகிறது.  வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடித்து தகர்க்கப்படுகின்றன.

இந்த நடைமுறையானது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், புல்டோசர் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.  இந்த நடவடிக்கைக்கு ஒருபுறம்  வரவேற்பு இருந்தாலும் மற்றொருபுரம் அந்த குடும்பத்தினர் தெருவில் விடப்படுவது கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.  இந்த மனுக்களை  நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது , கடந்த மாதம் 17ம் தேதி அன்று விசாரணை நடத்தி  இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டில் சொத்துகளை இடிப்பது நடக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

பொது சாலைகள், நடைபாதைகள், ரயில் வழித்தடங்கள் அல்லது பிற பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் உச்ச நீதிமன்றம் அப்போது கூறியிருந்தது. நிலம் தொடர்பான நகராட்சி சட்டங்களின் கீழ் சொத்துகளை எப்போது, எப்படி இடிக்கலாம் என்பது குறித்த உத்தரவுகளை வகுப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பதற்காக புல்டோசர் நடவடிக்கை நியாயமாகாது. கற்பழிப்பு அல்லது பயங்கரவாதம் போன்ற கடுமையான குற்றங்களுக்கு கூட புல்டோசர் நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது” என்றார்.

விசாரணையின்போது நீதிபதி கவாய் கூறுகையில், “கோயிலாக இருந்தாலும் சரி அல்லது தர்காவாக இருந்தாலும் சரி அல்லது குருத்வாராவாக இருந்தாலும் சரி… பொது மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்.” என்றார்.

நீதிபதி விஸ்வநாதன் கூறுகையில், “முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலையில் விடப்படுவது நல்லதல்ல” என்றார்.

சாலைகள், நீர்நிலைகள் அல்லது ரயில் வழித்தடங்களில் மத ரீதியான அமைப்புகள் ஆக்கிரமிப்பு செய்வதை காட்டிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என நிரூபிக்கப்பட்டாலும், மாற்று ஏற்பாடுகளைச் செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் பெண்கள், குழந்தைகள், முதியவர்களை தெருவில் நிறுத்தாமல் உரிய அவகாசம் வழங்கி, ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் எனவும், குற்ற வழக்கில் சிக்கியவர்கள் வீடுகள் புல்டோசர் மூலம் தகர்க்கப்படும் விவகாரத்தில் மத, சமூக பின்னணியைப் பாராமல் பொதுமக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாகப் பொருந்தும் என்பதை அடிக்கோடிட் டுக் காட்டிய உச்சநீதிமன்றம், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை மீண்டும் உறுதிபட சுட்டிக்காட்டியுள்ளது.