புதுச்சேரி

புதுச்சேரியில் கடல் நீர் பச்சை நிறமாக மாறியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

                                           மாதிரி புகைப்படம்

தமிழகம் மற்று புதுச்சேரியில் அண்மையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால், மழை பெய்தது. எனவே கடலில் சுமார் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும்மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என்றும் மீன்வளத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் கடல் அலையின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

நேற்று புதுச்சேரி கடலின் அலை பச்சை நிறத்தில் மாறத் தொடங்கியது. கடல் நீரில் லேசான துர்நாற்றம் வீசியது. .அப்போது  புதுச்சேரிக்கு வந்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சிலர் கடலில் குளித்து கொண்டு இருந்தனர். கடல்நீர் நிறம் மாறத் தொடங்கிய சிறிது நேரத்தில் குளித்துக்கொண்டு இருந்த பொதுமக்களுக்கு உடலில் லேசான அரிப்பு எடுத்தது.

உடனே அவர்கள் கரைக்கு திரும்பியதை பார்த்த பொதுமக்கள் பீதியால் கடலுக்குள் இறங்கவில்லை.  ஆனால் கடல்நீர் பச்சையாக மாறிய தகவல் அறிந்து ஏராளமானவர்கள் கடற்கரைக்கு வந்து கடல் அலையை வேடிக்கை பார்க்க தொடங்கினர். நேற்று மாலை தலைமை செயலகத்தில் இருந்து காந்தி சிலை வரை ஏராளமான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கின.

தகவல் அறிந்த கடல்வாழ் உயிரின உயர் ஆய்வு மைய பேராசியர்கள் கடற்கரைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு கடல் நீரை சேகரித்து சென்றுள்ளனர். புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகளும் கடல் நீரை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்த நீரை ஆய்வு செய்த பின்னரே எதுவும் சொல்ல முடியும் என ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.