ட்சிரோலி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மகாராஷ்டிரா வேலையின்மை குறித்து பேசி உள்ளார்.

மராட்டிய சட்டசபைக்கு வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலையொட்டி கட்சிரோலியில் காங்கிரஸ் பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி ,

“ஆளும் கட்சியினர் உண்மையான பிரச்னையிலிருந்து மக்களை திசைதிருப்பும் பணிகளைச் செய்கின்றனர். இளைஞர்கள் திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர். அதற்காக உழைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இதில் அரசு கவனம் செலுத்தவில்லை. காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாநில அரசு தவறிவிட்டது.

மகாராஷ்டிராவின் பல திட்டங்கள் குஜராத்துக்கு மாற்றப்பட்டதால் மகாராஷ்டிரத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நாட்டில் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது மராட்டிய மாநிலத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு காண பா.ஜ.க. தவறிவிட்டது. இதற்கான விளைவுதான் இளைஞர்களின் தற்கொலை.

பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறந்த வாழ்க்கைக்காக வாக்களிக்க வேண்டுமே தவிர மாதம் ரூ.1,500 கிடைக்கிறது என்பதற்காக வாக்களிக்கக் கூடாது. நாம் ஒன்றாக இருந்தால், பாதுகாப்புடன் இருப்போம் என பாஜக தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர். ஆனால், இந்த நாட்டில் உண்மையில் பாதுகாப்புடன் இருப்பது அதானிதான். பிரச்னைகளில் சாமானிய மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும்போது, மக்களுக்கான அரசின் கஜானாவை இயக்கிக்கொண்டிருப்பது அதானிதான் என்பதை நாடறியும்.

விமான நிலையம், துறைமுகம் என நாட்டின் பெரும்பாலான சொத்துகள் அதானி குழுமத்தின் வசம் உள்ளது. தேசிய சொத்துகளை தனிநபருக்கு ஒதுக்குவதை விடுத்து, நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பா.ஜ.க. அரசு கவனம் செலுத்த வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் நமது தலைவர்கள் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருந்தனர். ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் இந்தப் பொறுப்பு இல்லாமல் போய்விட்டது. அமைச்சர்களும், முதல்-மந்திரிகளும் ஏன்? பிரதமர் கூட மக்களிடம் பதில் சொல்ல முடியாதவர்களாக மாறிவிட்டனர்.

அவர்களின் நடத்தை மாறிவிட்டது. அவர்கள் உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பி சமூகத்தை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறார்கள். அதானிக்கு எவ்வளவு பழங்குடியினர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சத்தீஸ்கர் மக்களிடம் கேளுங்கள். கடந்த பத்து ஆண்டுகளில் அரசியலின் திசை மாறிவிட்டது. அதை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்”

என்று உரையாற்றி உள்ளார்.