டெல்லி

நேற்று நடந்த விழாவில் பொன்னியின் செல்வன் படத்துக்கு ஜனாதிபதி தேசிய விருது வழங்கியுள்ளார்.

இந்திய அரசால் ஆண்டுதோறும் இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய திரை படைப்புகளுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. இதை அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு இதனை தேர்ந்தெடுக்கிறது. கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி 70வது தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது.

நேற்று டெல்லியில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மட்டும் சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு (ரவிவர்மன்), சிறந்த பின்னணி இசை (ஏ.ஆர்.ரகுமான்), சிறந்த ஒலிப்பதிவு (ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி) ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 வென்றுள்ளது. இதற்கான விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க அதனை படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன், இயக்குனர் மணி ரத்னம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.