சென்னை: தமிழ்நாட்டில் 42 துக்கடா கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் 474 கட்சிகளை நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் திமுக கூட்டணியில் உள்ள ஜவாஹிருல்லா தலைமையிலான மனித நேய மக்கள் கட்சியும் நீக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிகளின்படி,  6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த கட்சிகளின் அங்கீகாரம்  ரத்து செய்யப்படும். அதன்படி,  தேர்தலில் போட்டியிடாத,   தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாமல் மக்களை ஏமாற்றி வந்த துக்கடா  கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம்  ரத்து செய்துள்ளது.

அதன்படி,  நாடு முழுவதும் 808 கட்சிகள் இதுவரை நீக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி, முதல் கட்ட நடவடிக்கையாக 334 கட்சிகள் நீக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் 474 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது.

நாட்டின் தேர்தல் முறையை சுத்திகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேர்தல் ஆணையம் 474 பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 42 கட்சிகள் நீக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி, மேலும், 359 கட்சிகளுக்கு கூடுதல் சோதனை நடவடிக்கைகள் (ஸ்குட்னி)  தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது,  இந்த கட்சிகள்  2021-22, 2022-23, 2023-24 ஆகிய மூன்று நிதியாண்டுகளுக்கான ஆண்டு தணிக்கை கணக்குகள் சமர்ப்பிக்காதது மற்றும் தேர்தலில் போட்டியிட்டும், செலவின அறிக்கைகள் தாக்கல் செய்யவில்லை என்பதால், அந்த கட்சிகளை நீக்குவதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளது.

இந்தக் கட்சிகள் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்தவையாகும். இந்த 359 கட்சிகளுக்கு, சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் காரணம் கூறக் கூலி நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, அந்தக் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

விளக்கங்கள் பரிசீலிக்கப்பட்ட பின், சம்பந்தப்பட்ட தலைமை தேர்தல் அதிகாரிகள் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், இறுதி முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கும்.

தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு

தேர்தல் ஆணையம், எந்தக் கட்சியும் தவறாகவோ அல்லது அநியாயமாகவோ நீக்கப்படாதபடி கவனமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், தேர்தல் முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை நிலைக்க, கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனவும் உறுதி அளித்துள்ளது.

808 கட்சிகள் இரண்டு மாதங்களில் நீக்கப்பட்டிருப்பது, இந்திய அரசியல் வரலாற்றில் பெரிய சுத்திகரிப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது. மேலும் 359 கட்சிகள் சோதனைக்குள் வருவது, அரசியல் துறையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்க ஒரு முக்கியமான படியாகும்.

தமிழ்நாட்டில் நீக்கப்பட்டுள்ள கட்சிகளில் முக்கியமானது, திமுக கூட்டணியில் எம்எல்ஏவாக தொடரும்,    ஜவாஹிருல்லா தலைவராக உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.  கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.ம.க. தனி சின்னத்தில் போட்டியிடாததால் பதிவை இழந்துள்ளது.

இதேபோல் ஜான் பாண்டியன் தலைவராக உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பதிவு, தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பதிவு, எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகத்தின் பதிவு, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் பதிவு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

தமிழ்நாட்டில் 22 கட்சிகள் உள்பட நாடு முழுவதும் 334 அரசியல் கட்சிகள் நீக்கம்..!