டெல்லி: பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிட முடியாது; விவரங்களை கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை, விலக்கப்பட்ட வாக்காளர்களின் தனி பட்டியலை வெளியிடவோ அல்லது விலக்கப்பட்டதற்கான காரணங்களை வழங்கவோ எந்த சட்டமும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதில் ரோகிங்கியா, நேபாளம் மற்றும் வங்க தேச அகதிகள் உள்பட பல லட்சம் போலி வாக்காளர்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தீவிர தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்களின் பூர்விகம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, அதற்கான ஆவனங்களை பெற்றது. அவ்வாறு ஆவணங்கள் தாக்கல் செய்யாத சுமார் 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 1ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் தவறு மற்றும் விடுபட்டவர்கள் இருந்தால், அவர்கள் ஆவனங்களுடன் வந்து தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு ஒரு மாதம் அவகாசமும் வழங்கி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட நடவடிக்கையை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தையும் முடக்கி உள்ளன. மேலும், தேர்தல் ஆணையம், மத்திய பாஜக அரசுடன் கூட்டணி சேர்ந்து, வாக்கு திருட்டு செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியின் தலைவர்கள் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆதார் எண், ரேஷன் அட்டை ஆகியவற்றை இருப்பிட ஆவணங்களாக காண்பிக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். வாக்காளர் திருத்தப்பட்டியல் விவகாரத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றும் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை எச்சரித்து இருந்தது.
இருந்தாலும் ஆகஸ்டு ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் வரைவு பட்டியலில் 65.2 லட்சம் வாககாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், விடுபட்ட நபர்கள் , சேர்க்கப்பட்ட நபர்கள், எதனால் விடுபட்டார்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது .
இந்த நிலையில் உச் நீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிட வேண்டும் என்று சட்டப்பூர்வ ஆணை எதுவும் இல்லை. வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத நபர்களின் தனி பட்டியலை வெளியிட முடியாது. வரைவு பட்டியலில் சேர்க்கப்படாதவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை கேட்க யாருக்கும் உரிமை இல்லை.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் எந்தவொரு தனிநபரையும் சேர்க்காததற்கான காரணங்களை வழங்க தேவையில்லை. எந்தவொரு காரணத்தாலும் கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்படாத நபர்களின் பூத் அளவிலான பட்டியலை அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டோம், அந்த நபர்களைத் தொடர்புகொள்வதில் அவர்களின் உதவியை ஆணையம் நாடியது. வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளுக்கு வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாத வாக்காளர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலும் வழங்கப்பட்டது.
இதனால் குறிப்பிட்ட நபர்களைச் சென்றடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும், தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபட்டிருக்க மாட்டார்கள் என்பதையும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் இருந்து நாங்கள்உறுதிசெய்கிறோம்.
குறிப்பாக நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமல்ல . அதேபோன்று வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் கண்டிப்பாக கூற முடியாது. மேலும் வரைவுப் பட்டியலில் விடுபட்ட நபர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கக் கோரி ஒரு அறிவிப்பைச் சமர்ப்பிக்கும் விருப்பம் உள்ளது. அதனை விரைவில் நடைமுறைப்படுத்துவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.