டெல்லி: 3வது முறையாக பிரதராக பதவி ஏற்றுள்ள மோடி, தனது முதல் வெளிநாட்டு பயணமாக  வரும் 14ந்தேதி இத்தாலி செல்கிறார். அங்கு  ஜி7 50-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

ஜி7 அமைப்பின்50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வரை நடைபெறுகிறது. இந்த அமைப்பில்,  அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டை நடத்தும் இத்தாலி அரசு, நட்பு நாட்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி,  இந்தியா, சவுதிஅரேபியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்பட பல  நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் 14-ம் தேதி ஒரு நாள் பயணமாக இத்தாலி செல்கிறார்.

இந்த மாநாட்டில் உக்ரைன் போர்,  காசா போர், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி பொருளாதார வளர்ச்சி குறித்து ஜி7 உச்சி மாநாட்டில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அத்துடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3-வது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு  மோடி செல்லும்  முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.