அபுதாபியிலிருந்து மும்பை வந்த விமானத்தில் புகைபிடித்த இந்தியர் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

டிசம்பர் 25ம் தேதி அபுதாபியிலிருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஃபசல் முகம்மது பிலக்கூல் (26) என்பவர் மீது இண்டிகோ விமான நிறுவனம் கொடுத்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமானப் பயணத்தின்போது பிலக்கூல் அதிகாலை 3 மணியளவில் கழிவறைக்குச் சென்றதாகவும் பின்னர் அவர் தமது இருக்கைக்குத் திரும்பியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழிவறையிலிருந்து கடுமையான சிகரெட் நெடி வீசியதைத் தொடர்ந்து, விமான ஊழியர் கழிவறையைச் சோதித்தபோது, அதனுள்ளே ஒரு சிகரெட் துண்டு இருந்ததைக் கண்டுபிடித்தார்.

அது குறித்து பிலக்கூலிடம் விமான ஊழியர்கள் கேட்டபோது, கழிவறையில் புகைத்ததை அவர் ஒப்புக்கொண்டதாகவும் அவரிடம் மீதமிருந்த இருந்த ஆறு சிகரெட்டுகள் உள்ள சிகரெட் பெட்டியை ஒப்படைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் மும்பையில் தரையிறங்கியதும் இண்டிகோ விமான நிறுவனப் பாதுகாவல் பிரிவிடம் பிலக்கூல் ஒப்படைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, மும்பை சாகர் காவல் நிலையத்தில் பிலக்கூல் மீது இண்டிகோ நிறுவனம் புகாரளித்தது. அதனடிப்படையில் காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.