சென்னை: கேரள மாநிலம்  திருவனந்தபுரத்திலிருந்து 5 எம்.பி.க்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, நேற்று இரவு சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். இந்த விமானம் விபத்துக்கு அருகில் சென்றது கடுமையான காற்றழுத்த சரிவில் சிக்கினோம். , இது மோசமான பயணம் என காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. இந்த விமானத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. வேணுகோபால் உட்படப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணித்தனர். பின்னர் அவர்கள் டெல்லி செல்ல  மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் எம்.பி.க்கள் மற்றும் பயணிகள் அனைவரும் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.

இதுகுறித்து  விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், “திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட விமானம் AI2455, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்படியும் வழியில் இருந்த மோசமான வானிலை காரணமாகவும் முன்னெச்சரிக்கையாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. விமானம் பாதுகாப்பாகச் சென்னையில் தரையிறங்கியது” என்றார்.
இதுகுறித்து விமானத்தில் பயணித்த காங்கிரஸ் எம்.பி.  கே.சி. வேணுகோபால், தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில், “இந்த விமானப் பயணம் விபத்திற்கு மிக அருகில் சென்றது” என்று பதிவிட்டுள்ளார். சற்று தாமதமாகப் புறப்பட்ட பயணம், பயங்கரமான பயணமாக மாறியது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராத விதமான கடுமையான காற்றழுத்த சரிவில் சிக்கினோம். சுமார் 1 மணி நேரம் கழித்து, விமானி சிக்னலில் கோளாறு இருப்பதாக விமானம் சென்னைக்குத் திருப்பி விடப்படுவதாக அறிவித்தார்” என்று வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.